Wednesday, October 28, 2009

காணாத இடமெல்லாம் காணப்போனோம்...! - 1

2009 எனக்கு அதிஷ்டமான ஒரு வருடம் போலும். வாய்ப்புகள் அதிகமாய் என் வீட்டு கதவைத் தட்டின.  அதிலொன்றுதான் எனக்குக் கிடைத்த அமெரிக்கா செல்லும் வாய்ப்பு. நினைத்துப் பார்க்க முடியாத ஒரு அதிஷ்டம். அதுவும், சகல வசதிகளுடன்- இலவச பயண, தங்குமிட மற்றும் உணவு வசதி. அமெரிக்கா செல்லுமுன் இது எப்படிக் கிடைத்ததென்று சொல்லிவிடுகிறேன். 

 BCIS இல் "முரண்பாட்டு தீர்வு"  கற்கை நெறியை தொடர்ந்து கொண்டிருந்த சமயம், ஒருநாள் எங்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் இது தொடர்பான அறிவித்தலைத் தந்ததோடு, விண்ணப்பபடிவம் அடங்கிய மின்னசல் ஒன்றையும் எங்கள் அனைவருக்கும் அனுப்பியிருந்தார். கிடைத்த  மின்னஞ்சலை படிக்க கால அவகாசம் கிடைக்காததால், அவுட்லுக் (MS Outlook) மெயிலில் நினைவூடியில் செருகிக்கொண்டேன். வேலைப்பளுவினால் (உண்ண்மயாகவே) மறந்துவிட்ட எனக்கு சரியாக முடிவுத்திகதிக்கு மூன்று நாளைக்கு முன்னம்  அவுட்லுக் நினைவூட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்திசெய்யத் தொடங்கினேன். யாமறிந்த மொழிகளிலே... என பாரதி (என்று நினைக்கிறன்) சொன்னதைப்போல், நான் நிரப்பிய விண்ணப்பப் படிவங்களிலே மிகக் கஷ்டமானதாக இருந்தது. சுய தரவிகளைவிட, கேட்கப்பட்ட கட்டுரைகளை எழுதுவதென்பது என்னை நொந்து நூலாகச் செய்தது. என்னசெய்வது, விதி என்று நொந்துகொண்டு, வெற்றிகரமாக விண்ணப்பபடிவத்தை முடிவுத்திகதியன்று, முடிவு நேரத்துக்கு கால்மணி நேரம் முன்பு ஒப்படைத்தேன். இருந்தும் நம்பிக்கையின்றி, இதை மறந்துவிட்டிருந்த எனக்கு, கிறிஸ்மஸ் விடுமுறையில் மன்னாரில் நின்றபோது வந்த அந்த மின்னஞ்சல் ஒரு தெம்பை கொடுத்தது. 

ஒடுக்கப்பட்ட  அல்லது புறக்கணிக்கப்பட்ட மக்களுடன் வேலை செய்யும் இளைஞர்களை வலுப்படுத்தும் நோக்கில் Business for Peace Alliance and Relief International ஆகிய அரச சார்பற்ற நிறுவனங்களால், அமெரிக்கா ராஜாங்க திணைக்களத்தின் அனுசரணையுடன் (US State Department)  உருவாக்கப் பட்டிருந்த இந்த நிகழ்ச்சித் திட்டத்திக்கு  நானும் தெரிவு செய்யப்பட்டிருந்தேன். இருப்பினும் இன்னும் ஒரு நேர்முகப் பரீட்ச்சைதான் அதனை உறுதிப்படுத்தும் என்ற காரணத்தால் யாருக்கும் சொல்லாமல் மறைத்துவிட்டேன். தை மாதாம் இரண்டாம் கிழமைகளில் கல்கிசை Palm Village Hotel இல் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்த இந்த மூன்றுநாள் வதிவிடத் தெரிவுப் பரீட்சையில் என்னோடு மேலும் 22 பேர்வரை பங்குபற்றியிருந்தனர். இதில் 17 பேர் மட்டுமே தெரிவு செய்யப்படுவர் என்பதால் மனதில் ஒரு பயம் எப்போதும் இருந்தது..

பல்துறையைச் சேர்ந்த புது நண்பர் நண்பிகளோடு ஆரம்பமான நிகழ்வின் மூன்றாம் நாளின்போது நேர்முகத் தெரிவு நடாத்தப்பட்டது. அமெரிக்கா தூதுவராலயத்தின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய இந்த தெரிவு முடிவடைந்தவுடன் முடிவுகள் அறிவிக்கப் படாத நிலையில்... திக் திக் என்ற மனதுடனேயே வெளியேறினோம்...மாதம் ஒன்று கடந்தும் பதில்லிலாத நிலையில் மின்னஞ்சல் மீது வெறுப்பு அதிகரித்தது. வழமையாய் Spam மெயில்களை நினைத்துக்கூடப் பார்க்காத நான், அவற்றையும் கிண்டத்தொடங்கினேன்.... (ஆதாரம் கீழே) 
 












(பயணிப்போம்...)



No comments:

Post a Comment